என் முதல் நூல் வெளியீட்டு விழா:
"உயிர் பருகும் மழை" (கவிதைத் தொகுப்பு)
நூலாசிரியர் : பா.தென்றல்
பககங்கள் : 136
விலை : ரூ. 120
வெளியீடு : இனிய நந்தவனம் பதிப்பகம், திருச்சி
நாள் : 23.11.2019
இடம்: ஸ்ரீ கார்த்திகேயன் பள்ளி,
காரைக்குடி
தலைமை:
மதிப்புறு கர்னல் முனைவர் இராஜேந்திரன்,
துணைவேந்தர், அழகப்பா பல்கலைக்கழகம்.
சிறப்பு விருந்தினர் : கவிஞர் மு.முருகேஷ், சென்னை
வெளியிட்டவர்கள் : தந்தையும் தாயும்
திரு.வே. பாலசுப்ரமணியன் ,தலைமையாசிரியர் (ஓய்வு),
திருமதி.கோ. ஆனந்தா, தமிழாசிரியர் (ஓய்வு)
முதல் பிரதி பெற்றுக்கொண்டவர்:
என் கணவர் பா.சரவணன், கணிதப் பட்டதாரி ஆசிரியர், அரசு உயர்நிலைப்பள்ளி, கல்லூர்
நூல் மதிப்புரை : முனைவர் கி.சுமதி,முதல்வர்,
மகளிர் கல்லூரி, மணமேல்குடி
வாசிப்பின் அவசியம், வீட்டில் நூலகம் எனத் தொடங்கிய துணைவேந்தர், "நான் இந்த உயரத்தை அடைவதற்கு நூல்களே படிக்கட்டுகள். புத்தகக்கடை, புத்தகக் கண்காட்சி மற்றும் பள்ளிகளுக்கு என்னை அழைத்தால் மகிழ்ச்சியாக வருகிறேன். பெண்கள் எழுதுவது கடினமே. அதுவும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பெண்கள் படைப்பாளிகளாக இருப்பது அரிது. இது அதிசயம்" என்றார். தொடர்ந்து மூன்று நூல்களைப் பற்றியும் (2 நூல்கள் சகோதரிகள் எழுதியவை) மிகவும் சிறப்பாக ஆய்வுரையும் நிகழ்த்தினார்.
யாரை அறிமுகம் செய்தாலும் மிகவும் மகிழ்ச்சியுடன் பொறுமையாக அவர்களுடனும் இரண்டொரு வார்த்தைகள் பேசிப் பழகிய இனிமையான எளிய மனிதர்.
சிறப்பு விருந்தினர் கவிஞர் மு.முருகேஷ். நாற்பதிற்கும் மேற்பட்ட நூல்களை எழுதியவர். ஹைக்கூ பிதாமகர், சொற்பொழிவாளர், பதிப்பாளர், பத்திரிக்கையாளர் எனப் பன்முகத் திறன் கொண்டு, தொடர்ந்து இலக்கிய உலகில் இயங்கிக் கொண்டிருக்கும் ஆளுமை.
எளிமையும் இனிமையும் வழியத் தம் சொல்லாற்றலால் அனைவரையும் கவர்ந்தார்.
எங்களது நூல்கள் குறித்து இந்து தமிழ் முதுநிலை உதவி ஆசிரியரான இவர் பேசும்போது,
"தனது வாழ்க்கையையே இனிய நந்தவனம் என்ற ஒரு புத்தகத்துக்குள் அடைகாத்துக் கொண்டிருக்கிற இனிய மனிதரது பதிப்பக வெளியீட்டில் மிகச் சிறப்பான வடிவமைப்புடன் மூன்று நூல்களும் வெளிவந்திருக்கின்றன. நான் பார்த்தவரையில் அதிகப் பெண்கள் கலந்து கொண்ட நூல் வெளியீட்டு விழா இதுதான்.
இலக்கியம் ஒன்று தான் மனித வாழ்வை இன்னும் ஈரமாக வைத்திருக்கின்றது. ஒரு பெண் எழுதுவது 100 ஆண்கள் எழுதுவதற்குச் சமம். நுட்பமாக மொழியைப் பயன்படுத்துகிறார்கள். ஆனாலும் தமிழ்ச் சமூகத்தில் பெண்ணெழுத்து இன்றும் குறைவாகவே இருக்கிறது. ஒரு பெண் எழுதிய கவிதையை அவள் வாழ்க்கையோடு பொருத்திப் பார்க்கிறார்கள். பெண் எழுதிய கவிதையைப் பெண்ணின் அனுபவமாகப் பார்க்காதீர்கள்" என்று
கவிதைகள் குறித்தும், பெண்ணைழுத்து மீது சமூகப் பார்வை குறித்தும் சிறப்புரையாற்றினார்.
நூல் வெளியீட்டு விழாவில் சிறப்பானதொரு வாழ்த்துரை வழங்கிய நண்பர் நலந்தா செம்புலிங்கம், முதல் பிரதி பெற்றுக் கொண்ட முனைவர் சந்திரமோகன், தோழர் ஜீவசிந்தன், ஆசிரியர் பா.சரவணன், நூலாய்வுரைகள் சிறப்பாக நிகழ்த்திய முனைவர் கி.சுமதி, முனைவர் இரா.வனிதா, எழுத்தாளர் ஜெயமேரி, புகைப்படக் கலைஞராகத் தாமே முன் வந்துதவிய அண்ணன் ஜான் செல்வா மற்றும் சிறப்பாகத் தொகுத்து வழங்கி நிகழ்வினை ஒருங்கிணைத்த இனிய நண்பர் நந்தவனம் சந்திரசேகரன் ஆகியோருக்கு நன்றி.
மற்றும் விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்த பார்வையாளர்கள் அனைவருமே அவரவர் துறையில் சிறப்பாகச் செயல்பட்டுக் கொண்டும் சாதித்துக் கொண்டும் இருக்கும் நண்பர்கள்.
அனைவருக்கும் நன்றி.
சில புகைப்படங்கள்













