Monday, 19 June 2017

"அம்மா வந்தாள்" நூலாய்வு.

அதே புத்தகம்; அதே எழுத்தாளார்; அதே புதினம்;
ஒரு வாசகனை வெவ்வேறு களத்திற்கு அழைத்துச் செல்லுமா?
மறுபடியும் படிக்கையில், ஏதேனும் மாற்றம் தெரியுமா?

சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன்னால் வாசித்த போது வெறும் கதையாய்த் தோன்றியது, நல்லவேளை, ஏற்கெனவே மோகமுள்ளைக் கடந்து வந்ததாலும், நூலாசிரியரைப் பற்றிய செவி வழிச் செய்திகளாலும் மனதில் எதுவும் தாழ்ச்சியாகத் தோன்றவில்லை

இது கதைதானா? இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்களா? இதெல்லாம் நடப்பது சாத்தியமா? என்றெல்லாம் சில கேள்விகள் முளைத்தன. இது எதிர் கால சந்ததிக்குச் சொல்லும் செய்தி என்னவோ? என்றும் குழம்பினேன்.என் அம்மாவிடம் வாதித்தும் ஒரு தெளிவு கிடைக்கவில்லை.
ஆனால் இன்று படிக்கையில் எத்தனையெத்தனை பரிமாணங்கள்! அந்தக் காலத்திலேயே ஒரு சமுதாய முரண்பாட்டைத் தைரியமாக மூட்டை பிரித்திருக்கிறார்.

அங்கே பவானியம்மாளின் வேத கைங்கர்யம் ஆச்சரியப்பட வைக்கிறது எனில், இங்கே எல்லாம் தெரிந்தும் மனைவியைக் கருக்கிடாத ஞானசூரியனான அப்பாவின் தெளிவு மிரள வைக்கிறது.

அம்மாவின் தோற்றப்பொலிவு, அம்மாவிற்கு அப்புவின் மீதான அதிகப்படியான அக்கறை, கணவனிடம்போறுமேகூறிய மிடுக்கு, வேத பாடம் கற்பிக்க எடுத்த முடிவிற்கான காரணம், சிவசுவுடனான உரையாடல், காசிக்குப் புறப்பட்டது என ஒவ்வொன்றிலும் அம்மா கதாபாத்திர வடிவமைப்பு மனதுக்குள் நிறைய விஷயங்களை அழகாகச் சொல்கிறது.

இந்துவின் ஏக்கமும், தழுவலும் கைம்பெண் மறுவாழ்வுக்கு ஆசைப்படுவது தவறில்லை என்று கட்டியம் கூறுகிறது.

கோபுவின் உருவ ஒற்றுமை, அலங்காரத்தின் முடிவுகள், தண்டபாணி வீட்டில் சிவசுவின் அன்னியோன்யம் இவை எல்லாம் இப்போது புரிகின்ற போது, எழுத்தாளர் ஒரு வித்தியாசமான சமூகச் சூழலைத் தேர்ந்தெடுத்து, எவ்வளவு லாவகமாகக் கையாண்டிருக்கிறார் என்பதும் தி. ஜானகிராமனின் எழுத்துகள் வாசகனை எவ்வாறு தன்னிடம் ஈர்த்துக்கொண்டுள்ளன என்பதும் புரிகிறது.


ஒரு முறை படித்துப் பாருங்கள் நண்பர்களே.

Friday, 2 June 2017







கவிக்கோ அப்துல் ர்குமானுக்குக் கவிதாஞ்சலி

கவிதை உலகின் மன்னன்
கவிமழை பொழியும் கண்ணன்
மதத்தால் இஸ்லாம் என்றாலும்
மனதில் மதம் பிடித்ததில்லை.


வானம்பாடிகளின் நாயகர்
வானகம் நாடிச் சென்றுவிட்டார்
புதுக்கவிதையில் தடம் பதித்தவர்
புது உலகம் தேடிப் போய்விட்டார்.


கவிதையில் குறியீடுகள் கண்டார்
ஆராய்ச்சி செய்து புரிய வைத்தார்.
கஜல், ஹைக்கூ  கவிதை எல்லாம்
தமிழில் நுழைய வாசல் வைத்தார்.


சாகாக் கவிதைகள் வடித்தெடுத்தார்
சாகித்ய அகாதெமி விருது பெற்றார்.
பேராசிரியராக வாணியம்பாடி சென்றார்
பெருங்கவிகள் வானத்தில் பறக்கச் செய்தார்.


கவியரங்கத்தில் ஒலிக்கும் இவர் குரல்
கவிதையருவி பொழியும் சாரல்
கவிதைகள் சொல்லும் சிலேடை
கையில் இவர் உருட்டும் பகடை


”சுட்டுவிரல்” நீட்டிய ”பித்தன்” இவர்
அதனால் ”நேயர் விருப்பம்” அறிந்தவர்
”முத்தமிழின் முகவரி” ஈந்தவர்
”முத்தங்கள் ஓய்வதில்லை” என்றவர்


”நிலவிலிருந்து வந்தவன்” நீர்தானா? 
நீள் தூக்கம் கொண்டதேனோ?
”தேவகானமாய்” இரங்கற்பா பாடுகின்றோம்
தேவரீர், ”இல்லையிலும் இருக்கின்றான்” நீரே.


”இறந்ததால் பிறந்தவன்” என்றாய்
மறுபடி எங்கே இறந்து போனாய்?
”மரணம் முற்றுப்புள்ளி அல்ல” என்றாயே
”கடவுளின்  முகவரி” தேடிச் சென்றாயோ?



மண்ணுலகை மறந்து சென்றவரே
”பால் வீதி”யில் குடி கொண்டீரோ?
தூசியாய்ப் பூமி உறுத்தியதோ?
துணையாய்க் கவிதை வந்ததுவோ?



உன்னைத் தேடி அலைகின்றோம் எங்கள் 
”கண்ணீர்த் துளிகளுக்கு முகவரி இல்லை”.
மண்ணாளும் கவிதைகள் படைத்தவரே
விண்ணாளும் ஆசையில் சென்றீரோ?


கவி உள்ளங்கள் கண்ணீர் சிந்துகின்றோம்
கவிக்கோவைக் காணாமல் தவிக்கின்றோம்
மனதில் பதிந்த உன் கவிதைகள்
மறக்க முடியாத உன் நினைவுகள்.

                                            பா.தென்றல்,
                                            காரைக்குடி.










கா