Friday, 2 June 2017







கவிக்கோ அப்துல் ர்குமானுக்குக் கவிதாஞ்சலி

கவிதை உலகின் மன்னன்
கவிமழை பொழியும் கண்ணன்
மதத்தால் இஸ்லாம் என்றாலும்
மனதில் மதம் பிடித்ததில்லை.


வானம்பாடிகளின் நாயகர்
வானகம் நாடிச் சென்றுவிட்டார்
புதுக்கவிதையில் தடம் பதித்தவர்
புது உலகம் தேடிப் போய்விட்டார்.


கவிதையில் குறியீடுகள் கண்டார்
ஆராய்ச்சி செய்து புரிய வைத்தார்.
கஜல், ஹைக்கூ  கவிதை எல்லாம்
தமிழில் நுழைய வாசல் வைத்தார்.


சாகாக் கவிதைகள் வடித்தெடுத்தார்
சாகித்ய அகாதெமி விருது பெற்றார்.
பேராசிரியராக வாணியம்பாடி சென்றார்
பெருங்கவிகள் வானத்தில் பறக்கச் செய்தார்.


கவியரங்கத்தில் ஒலிக்கும் இவர் குரல்
கவிதையருவி பொழியும் சாரல்
கவிதைகள் சொல்லும் சிலேடை
கையில் இவர் உருட்டும் பகடை


”சுட்டுவிரல்” நீட்டிய ”பித்தன்” இவர்
அதனால் ”நேயர் விருப்பம்” அறிந்தவர்
”முத்தமிழின் முகவரி” ஈந்தவர்
”முத்தங்கள் ஓய்வதில்லை” என்றவர்


”நிலவிலிருந்து வந்தவன்” நீர்தானா? 
நீள் தூக்கம் கொண்டதேனோ?
”தேவகானமாய்” இரங்கற்பா பாடுகின்றோம்
தேவரீர், ”இல்லையிலும் இருக்கின்றான்” நீரே.


”இறந்ததால் பிறந்தவன்” என்றாய்
மறுபடி எங்கே இறந்து போனாய்?
”மரணம் முற்றுப்புள்ளி அல்ல” என்றாயே
”கடவுளின்  முகவரி” தேடிச் சென்றாயோ?



மண்ணுலகை மறந்து சென்றவரே
”பால் வீதி”யில் குடி கொண்டீரோ?
தூசியாய்ப் பூமி உறுத்தியதோ?
துணையாய்க் கவிதை வந்ததுவோ?



உன்னைத் தேடி அலைகின்றோம் எங்கள் 
”கண்ணீர்த் துளிகளுக்கு முகவரி இல்லை”.
மண்ணாளும் கவிதைகள் படைத்தவரே
விண்ணாளும் ஆசையில் சென்றீரோ?


கவி உள்ளங்கள் கண்ணீர் சிந்துகின்றோம்
கவிக்கோவைக் காணாமல் தவிக்கின்றோம்
மனதில் பதிந்த உன் கவிதைகள்
மறக்க முடியாத உன் நினைவுகள்.

                                            பா.தென்றல்,
                                            காரைக்குடி.










கா

No comments:

Post a Comment