Thursday, 18 January 2018

Paper presentation on the literary works of a popular Tamil poet Thangam Moorthy by me in an International Conference at Alagappa University, Karaikudi

இருபதாம் நூற்றாண்டில் இந்தியா - ஆசியான் கவிஞர்கள் 2017

பன்னாட்டுக் கருத்தரங்கில் என் கட்டுரை குறித்து உரையாற்றிய போது...

"தேவதைகளால் தேடப்படும் புதுகைக்கவிஞர் தங்கம் மூர்த்தி " என்னும் தலைப்பில்.

"இந்திய - ஆசியான் தமிழ்க்கவிஞர்கள் பன்னாட்டுக் கருத்தரங்கம்" அழகப்பா பல்கலைக்கழகத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

பண்பாட்டு மைய இயக்குநர் முனைவர்.செந்தமிழ்ப் பாவையம்மாவின் மலர்ந்த முகத்துடன் கூடிய சிறந்த ஏற்பாடுகள் மிக அருமை.

கருத்தரங்க மேடை
கவிஞர் முபீன் சாதிகா வசம்.
அவர் தொகுப்புரையும்
ஒரு கவிஞரும் விடுபட்டுவிடாது மேடையேற்றித்
தமிழும் மலாயும் கவிதை மணம் வீசச் செய்தது பரவசம்.

நூலாக்கமும் நூல் வெளியீடும் பாராட்டத்தக்க நற்பணிகள் .

மலேசியா, இந்தோனேஷியா மற்றும் பல நாட்டுக் கவிஞர்கள் 40 பேரும் ,
தமிழகப் பெண் கவிஞர்கள் 38 பேரும் கவிதை வாசித்தது அருமை.


கவிஞர் கருமலைத் தமிழாழன், பேராசிரியர் ஜோஷ்வாட் போன்றோரும் கவிதையுடன் கட்டுரை சமர்ப்பித்தது சிறப்பு.

                                                      என் கட்டுரை: (unedited)


தேவதைகளால் தேடப்படும் புதுகைக் கவிஞர் தங்கம் மூர்த்தி
                                
அறிமுகம் :

      தமிழ் இலக்கிய வரலாற்றில் சங்ககாலப் புலவர்கள் தொட்டு இக்காலக் கவிஞர்கள் வரை வரிசைப்படுத்தினால், அந்தத் தொடரில் ஒரு நிலையான, நிரந்தரமான தனித்த இடத்தை வகிக்கக்கூடியவர் பன்முகத் திறமை வாய்ந்த கவிஞர் தங்கம் மூர்த்தி.
சேவியர் ஹெராட் என்பவர், கவிதைகள் பற்றிக் குறிப்பிடுகையில்,

                                     ”கவிதை ஒரு அற்புதமான மின்னல்;
                                         மௌனச் சொற்களாலான மழை;
                இதயத் துடிப்புகளாலும் நம்பிக்கைகளாலும் ஆன ஒரு காடு;
                                            ஒடுக்கப்பட்ட மக்களின் கீதம்;
                                 விடுதலை பெற்ற மக்களின் புதிய பாடல்;
                                       கவிதை மானுடத்தின் விமோசனம்“

என்று மிக அழகாகக் கவிதைக்கு இலக்கணம் கூறியுள்ளார். கவிதைக்கான இந்த அனைத்து அம்சங்களையும் இந்தக் கவிஞரின் கவிதைத் தொகுப்புகளில் எளிதாகக் காண முடிகிறது. பலவகைப்பட்ட உணர்வுகளையும் தன் கவிதைகளில் இனிய தகுந்த தமிழ்ச் சொற்களால் அடுக்கிப் படைப்புலகில், பாட்டுக்கோட்டை கட்டிய  பட்டுக்கோட்டையாரைப்போல், ஒரு எளிய ஆனால் உறுதியான கவிதைக் கோட்டையைப் புதுக்கோட்டை மண்ணில் வாழ்ந்துகொண்டு அந்த மண்ணின் மணம் மாறாமல் கட்டமைத்து வருபவர் கவிஞர் தங்கம் மூர்த்தி., இவர் எழுதி வெளியிட்டுள்ள “தேவதைகளால் தேடப்படுபவன்” மற்றும் “அந்த வானவில்லுக்கு எட்டு நிறங்கள்” என்னும் இரு கவிதைத் தொகுப்புகளின் நயங்களை எடுத்துக்காட்டுவது இக்கட்டுரையின் நோக்கமாகும்.

கவிஞரின் தோற்றமும் எழுச்சியும் : 

       கவிஞர் தங்கம் மூர்த்தி, புதுக்கோட்டை மாவட்டத்தில் அறந்தாங்கி அருகில் உள்ள சுப்பிரமணியபுரம் என்னும் சிற்றூரில் 19.08.1964 ல் பிறந்தார். இவரது பெற்றோர் டாக்ட.கே.கே.தங்கம் மற்றும் திருமதி.ஜெயலெட்சுமி ஆவர். இவர் ஆங்கில இலக்கியத்தில் ஒரு இளங்கலை பட்டமும் இரண்டு முதுகலைப் பட்டங்களும் பெற்றவர். புதுக்கோட்டையில் திருக்கோகர்ணம் பகுதியில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் பள்ளியை நிறுவி, அப்பள்ளியின் சிறந்த முதல்வராகவும் பணியாற்றி வருகிறார். இவரது பள்ளியின் சிறப்பு, குழந்தைகள் மகிழ்ச்சியாகக் கற்றல். பலவிதமான கற்றல் கற்பித்தல் களங்களையும் கற்றல் சூழல்களையும் மாணவர்கள் விரும்பும் வண்ணம் உருவாக்கித் தருகிறார்.
     இவரது மனைவி திருமதி மு.அஞ்சலிதேவி. புதுக்கோட்டை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பட்டதாரி ஆசிரியராகப் பணி புரிந்து வருகிறார். இவர்கள் பெற்ற செல்வங்கள் செல்வி.நிவேதிதா மற்றும் செல்வி.காவியா மூர்த்தி ஆகியோர்.
இவரது சிறப்பான ஆசிரியப் பணியைப் பாராட்டித் தமிழக அரசு ‘டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதும்’, மத்திய அரசு ‘தேசிய நல்லாசிரியர் விருதும்’ வழங்கிச் சிறப்பித்தன. மேலும் இவர் கவிஞர் சிற்பி விருது, கவிக்கோ விருது, செல்வன் கார்க்கி விருது, சிறந்த சமூக சேவகர் விருது எனப் பல விருதுகளும் பட்டங்களும் பெற்றுள்ளார். மதிப்புறு பணிகள் பல வகித்தும் சமூக நலப் பணிகளிலும் தம்மை இணைத்துக் கொண்டுள்ளார்.

    முதலில் பூத்த ரோஜா” (1994) என்னும் ஹைக்கூ நூல் தொடங்கி, “அந்த வானவில்லுக்கு எட்டு நிறங்கள்” வரை  இதுவரை பத்து நூல்கள் எழுதி வெளியிட்டுள்ளார். இலக்கியத் துறையில் இன்று உலக அளவில் பேசப்படுகின்ற  கவிஞராகவும், மேடைப் பேச்சாளராகவும், பட்டிமன்றப் பேச்சாளராகவும்,சிறந்த எழுத்தாளராகவும் பவனி வருகிறார்.

தங்கம் மூர்த்தியின் பணிகளும் படைப்புகளும்

”உன்னுடன் சேர்ந்து
நடக்க ஆரம்பித்த பிறகுதான்
சாலையோர மரங்களிலிருந்து உதிரும்
பூக்களின் மௌனத்திலும்
நான்
இசை கேட்க ஆரம்பித்தேன்.”

என்று அறிவுமதி கூறியதைப் போல், கவிஞர் தங்கம் மூர்த்தியின் புதுக் கவிதைகளையும் துளிப்பாக்களையும்  படிக்க ஆரம்பித்த பிறகு தான் நமக்கு நம்மைச் சுற்றிலும் மலர்ந்து இருக்கின்ற ஒரு புதிய உலகம் தெரிய வரும். அதுமட்டுமன்று,

                “சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை
                 இகல்வெல்லல் யார்க்கும் அரிது.”

என்னும் குறளுக்கேற்ப சபையைக் கட்டிப் போட்டுத் தன் வார்த்தை வீச்சில் மயங்க வைக்கும் மாயக்கண்ணன் இவர். பார்வையாளர்களின் நோக்கும் போக்கும், இருப்பிடச் சூழலின் தன்மையும் அறிந்து உரையாற்றக்கூடிய வெற்றிகரமான மேடைப் பேச்சாளர் இவர். தான் சொல்லப் புகும் கருத்துகளை இடம் பொருள் காலம் அறிந்து தேர்ந்தும் ஏற்றியும் போற்றியும் நகைச்சுவை கலந்தும் பேசக்கூடிய ஆற்றல் வாய்ந்தவர். கேட்டார்ப் பிணிக்கும் தகையவே வேட்ப மொழியும் சொல்லாற்றலை வரமாகப் பெற்றவர். இவர் பின்பற்றும் மேடை நாகரிகம் அனைவரையும் கவரக்கூடியது. எந்த அரசியல் கலப்புமற்றது; தனிமனிதத் துதியோ துவேஷமோ அற்றது. “செந்தமிழும் நாப்பழக்கம்” என்பதை நன்கு உணர்ந்தவர் என்பது அவரது நாவினிலும் நாபிக் கமலத்தினிலும் இருந்து பிறந்து வரும் அழுத்தம் திருத்தமான, நுனிநாக்கு ஆங்கிலம் போல் அல்லாத தெளிவான உச்சரிப்புடன் கூடிய தமிழ்ச் சொற்களினால் அறியலாம். அழகு தமிழ் இவரிடம் பழகு தமிழ் ஆகி மிளிர்வதைக் கேட்டு ரசிக்கலாம்.

    தாய்ப்பாலோடு தமிழுணர்வையும் மாந்திய மறத் தமிழனாய்க் கவியரங்க மேடையில் ஒலிவாங்கியைக் கைப்பிடித்துக் கவிஞர் கவி பாடுவதைக் கேட்கும் பொழுது, வில்லியம் வேர்ட்ஸ்வொர்த்கூறிய “ poetry is the spontaneous overflow of powerful feelings; it takes its origin from emotion recollected in tranquility” என்ற வரிகள் நம் நினைவு ஊஞ்சலில் வந்து ஆடுவதைக் காணலாம்.

தேவதைகளால் தேடப்படுபவன்

         கவிதைக்கான கருப்பொருள் தெரிவுகள், தெளிவாக மொழிதல், தகுந்த சொற்களைத் தேர்ந்தெடுத்தல் போன்ற கவிதைப் பண்புகள் வெகு சிறப்பாக நூல் முழுவதும் விரவிக் கிடக்கின்றதைக் காணமுடிகிறது. கவிதை நடை, இந்தக் கவிஞரைப் போலவே எளிமை மிகுந்திருக்கிறது. எளிய சொற்களைக் கையாண்ட விதமும் வெகு சிறப்பு.

        குழந்தைகள் கூத்தாடிக் கும்மாளமிட்டுக் குதூகலித்து மகிழும் தருணங்களைக் கூடைகூடையாய் அள்ளித் தருபவை திருவிழாக்கள்தான். இதை நயமாகக் கவிதையில் பதிவு செய்வது கவிஞர்களுக்கியல்பு. ”ஒவ்வொரு சிறுவனும் தனக்கான கொண்டாட்டத்திற்கான வழிகளைத் தேடிக்கொள்கிறான்” என்பார் எஸ்,ராமகிருஷ்ணன். ஆனால், இங்கே ”திருவிழாக்களும் குழந்தைகளும்” கவிதையில், குழந்தைகள் திருவிழாக்களை வரவேற்று அழைத்து வருவதும், திருவிழாவின் கரங்களைத் துழாவுவதும் அவற்றை முத்தமிடுவதும் அழகிய கற்பனை. இவைகூடப் பரவாயில்லை, திருவிழாக்களிடம் கோரிக்கை வைப்பதும் , பிரிவுபசாரமளிப்பதும் பின் அவை உறையும் இடமும் நம் கற்பனைக்கு எட்டாச் சிகரங்கள். ஆனால் குழந்தைகள் உலகின் யதார்த்தங்களான அவற்றைக் கவிஞர் மிக அழகாகப் பதிவு செய்திருக்கிறார்.

        நாய்களைப் பற்றிய கவிதை அல்ல என்று ஒரு கவிதையைத் தொடங்கி, நாய்களைப் பற்றியே பேசும் பொழுது, ஆங்கே மறைமுகமாகப் பாரதியின் சாயல் இவர் எண்ணத்திலும் புலப்படுகின்றதோ என்று தோன்றுகிறது. “வாலைக் குழைத்து வரும் நாய்தான் – அது மனிதற்குத் தோழனடி பாப்பா” என்று ஆனந்தக் கூத்தாடியவனன்றோ பாரதி! தங்க மூர்த்தியும் இங்கு இயல்பு மனத்தினனாக வருணித்திருக்கிறார்; கோபம் கொள்ளாமல். தொந்தரவு தரும் நாய்களின் சத்தத்தில் பிறந்த கவிதையையும் வாசகனை.ரசிக்க வைத்திருப்பது பெரு வியப்பு.

        இந்தக் கவிதை நதியில் காதல் மீன்களின் வரத்துக் குறைவாய் இருப்பினும் ஆங்காங்கே சில காதல் கவிதைகள் தங்க மீன்களாய் நீந்தி வருகின்றன. “நிலவுகள் பூக்கும் பூமி”, “திறப்பு விழா”, “நமக்கருகே மிதக்கும் வானம்”, “கானகமும் கடவுளும்” ஆகிய கவிதைகள் காதல் நீரோட்டத்தில் கலந்து இறுதி வரிகளிலே ஒரு நம்பிக்கை ஒளியைப் பாய்ச்சுகின்றன.

         “உயர்திணை” மற்றும் “பணம் காய்க்கும் மரம்” ஆகிய கவிதைகளில் நடமாடும் ஆறறிவு மனிதர்களைப் பார்க்கும் பொழுது, மனிதர்களைப் பற்றிய கவிஞரின் மதிப்பீடுகளும், அவர்களது செயல்பாடுகளில் இவரது ஆதங்கமும் தெளிவாக வெளிப்பட்டுள்ளன என்றே சொல்லலாம். ”சீ மிருகமே! என்று மனிதனைத் திட்டாதே. மனிதனே, கொஞ்சம் பொறு./ காட்டுக்குள் என்ன சத்தம்/ ஏதோ ஒரு மிருகம் /இன்னொரு மிருகத்தை ஏசுகிறது/ சீ மனித்னே” என்று கவிப் பேரரசு வைரமுத்து நொந்து பாடிய வரிகள் நினைவில் வந்து போகின்றன.

          “காலை மாலை உலாவி நிதம்/ காற்று வாங்கி வருவோரின் காலைத் தொட்டுக் கும்பிட்டுக் /காலன் ஓடிப் போவானே”என்ற கவிமணி தேசிக விநாயகத்தின் வரிகளை நன்கு உணர்ந்தவர்கள் நாம், ஆனால் கடைப்பிடிக்க மாட்டோம். நடைப்பயிற்சிக்குச் செல்லும்போது, நடைப்பயிற்சி எப்படியெல்லாம் நடக்கிறது என்னும் நிஜங்களைக் கவிஞர்  “நடைப்பயிற்சியும் சில நண்பர்களும்” கவிதையில் மிக அழகாகக் கோடிட்டுக் காட்டியிருக்கிறார்.

         ஒரு மாபெரும் காப்பியத்தில் சிலம்பின் பரல்கள் சிதறியதால் எரிந்தது ஒரு நகரம். “ஒரு மாறுவேடப் போட்டியின் மறு பக்கத்தில்” என்ற கவிதையில் குழந்தைகளின்  மகிழ்ச்சிகளும் ஏமாற்றங்களும் சிதறியதால் உடைந்து போகிறது ஒரு கவியுள்ளம். அவரது உற்றுநோக்கல் திறனும், குழந்தைகள் மீது அவர் கொண்ட பரிவும் தெளிவாகத் தெரிகின்றன இங்கே.

           அடுத்ததாக, “பற… பற…” கவிதையில் குழந்தைக்குச் சுதந்திரம் மறுக்கப்படுவது  மிகத் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. குழந்தைக்கு ‘நெல்’ அறிமுகம் இல்லை என்பதையும் உள்ளங்கை நெல்லிக்கனி போல் காட்டியிருக்கிறார். அடுத்த தலைமுறையினருக்கும் விவசாயத்திற்குமான தொலைவை இது காட்டுகிறது.
          இப்படி ஒவ்வொரு கவிதையும் வெவ்வேறு தளங்களில் மிகச் சிறப்பாகப் படைக்கப்பட்டுள்ளது.மேலும் இந்த நூல், அம்மாவுக்கு எனத் தொடங்கி, பாட்டியிடம் முடிவடைந்திருப்பது நடைமுறை வாழ்க்கையில் சொந்த பந்தங்களின் தேவையைச் சொல்வது போல் தோன்றுகிறது.

அந்த வானவில்லுக்கு எட்டு நிறங்கள்

       பள்ளிப் பருவத்தில் அறிவியல் ஆசிரியர் ‘விப்ஜியார்’ நினைவில் கொள்; வானவில்லின் நிறங்கள் ஏழு என்று சொல்லிக் கொடுத்தது நினைவில் நிற்கின்றது இன்னும். ஆனால் இந்தக் கவிஞர் தங்கம் மூர்த்தி ”அந்த வானவில்லுக்கு எட்டு நிறங்கள்” என்கிறாரே, என்னவென்று பார்ப்போம் என எண்ணிக் கவிதை நூலை வாங்கினேன். அட்டையில் ‘சுழலும் கவியரங்கம்’ என்று பார்த்ததும் மேலும் வியந்தேன்.

         சிங்கப்பூரில் உமறுப் புலவர் தமிழ் மொழி நிலையத்தில்  வானவில்லின் நிறங்களாய்ப் பிச்சினிக்காடு இளங்கோ, ந.வீ.விசயபாரதி, நெப்போலியன், இராம. வயிரவன், கோ. இளங்கோவன் மற்றும் அழகு சுந்தரம் ஆகிய ஆறு  ஆண் கவிஞர்களும், இன்பா என்னும் பெண்கவிஞர் ஒருவரும் தங்கம் மூர்த்தி தலைமையில் தரப்பட்ட தலைப்புகளில் சொல்லப்பட்ட வரிகளுக்குள் கவிதைகள் எழுதி, ஒரு சுழற்சி முறையில் வாசித்தளித்திருக்கின்றனர். அங்கு நம் தமிழன்னைக்குச் சூட்டப்பட்ட உதிரிப் பூக்களாம் பாக்களை எல்லாம் இங்குக் கவிஞர் அப்படியே ஒரு நந்தவனப் பூக்களைப் போல் சேகரித்துக் கொண்டு வந்து பாமாலை கட்டியிருக்கிறார்.

         அணிந்துரையில் சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகத் தலைவர் நா.ஆண்டியப்பன், சுந்தரத் தமிழில் கவிதை பாடிக் கவியரங்கத் தலைமையேற்றுக் கருத்துரையும் அற்புதமாக வழங்கிப் பார்வையாளர்கள் அனைவரையும் சொக்க வைத்தார் இந்தத் தங்கக் கவிஞர் என்று பாராட்டியிருப்பது சிறப்பு. 

            ”கவியரங்க நுழைவாயிலில்” தங்கம் மூர்த்தி மிகத் தெளிவாக இந்தச் சுழலும் கவியரங்க நடைமுறைகளை அனைவருக்கும் விளங்கும்படிக் கவிதையிலேயே எடுத்துரைக்கின்றார். படிக்க நமக்கு ஆர்வம் மேலிடுகிறது . ஏழு சுற்றுகளில் ஏழு கவிஞர்களும் ’சின்னச் சின்னக் கவிதைகளை வண்ண வண்ண வார்த்தைகளால் செவி குளிரச் சூட்டினர்; அதை ஓவியம் போல்  தீட்டினர்’.

           முதலில் கவிஞர்களின் சுய அறிமுகம் ஆறு வரிகளில் கவிதையாக ஆரம்பமானது. அதில் கவிஞர், “எந்த முகம் இருந்தென்ன? அன்புமுகம் ஒன்றிருந்தால் அகிலத்தை வெல்லலாம்” என்ற புதிய சூத்திரம் ஒன்றைக் கற்றுக்கொடுக்கின்றார். 

        முதல்  சுற்றாக, போதிமரம் மற்றும் காணிநிலம் பற்றிச் சிறுகுறிப்பு வரையக் கேட்டிருக்கின்றார் கவிஞர். புத்தர், பாரதியார் என்ற இரண்டு பிரம்மாண்டமான் ஆளுமைகளை முதல் தலைப்பிலேயே துணைக்கழைத்திருக்கிறார் கவிஞர். தனது கவிதைகளை முதலில் படைத்திருக்கின்றார். “போதி மரங்கள் போதைப் பூக்களைக் கொட்டுவதைவிட அதை வெட்டுவதே நல்லது” என்று இன்றைய சமூகத்திற்கு நல்வழி காட்டியிருக்கிறார். ஒரே வரியில் நச்சென்று “ மகா கவியும் மகாகவி சார்ந்த இடமும் காணி நிலம்” என்று ஆறாவது வகை நிலத்தைத் தமிழிலக்கணத்துக்குத் தந்து, வியக்க வைக்கிறார்.   
  
          இரண்டாவது சுற்றுக்கான தலைப்பாகக் கம்பர், இளங்கோவடிகள் மற்றும் திருவள்ளுவர் குறித்து இரு வரி ஓவியம் வரையக் கேட்டுக்கொள்ளப்பட்டு, உண்மையில் கவியோவியங்கள் உயிர்ப்புடன் தீட்டப்பட்டுள்ளன. கம்பரைக் குறிப்பிடுகையில் தங்கம் மூர்த்தி, விலங்குகளை மனிதனாக்கினார். மனிதர்களைக் கடவுளாக்கினார்” என்று இரண்டு வரிகளுக்குள் ஒரு இதிகாசத்தையே சிறைப்பிடித்துவிட்டார், அந்த அகத்திய முனியைப் போல என்று சொன்னால் மிகையாகாது.

         அடுத்த சுற்றில், லீகுவான் யூ மற்றும் மகாத்மா காந்தி என்னும் இரு நாட்டு அரசியல் பெருந்தலைவர்கள் பற்றி மூன்று வரிகளில் முத்திரை பதித்திருக்கின்றனர்.அனைத்துக் கவிஞர்களும். அவற்றில் தமிழ்த் தாயாக லீகுவான் யூவையும் , ‘எல்லோருக்கும் எளிதில் புரியும் திருக்குறளாகக்’ காந்தியடிகளையும் ஒப்புமைப்படுத்திக் கவி பாடிய திறம் தங்கம் மூர்த்தியின் தனித் திறமையை எடுத்தியம்புகின்றது.

         நான்காவது சுற்றில், சூழ்நிலையியல் வினாத்தாள் போல்  இளமை- முதுமை, கருவறை – கல்லறை, தொட்டில் – கட்டில், கண்ணீர் – வியர்வை ஆகியவற்றின் ஒற்றுமை, வேற்றுமைகள் கவித்துவமாக வரையப்பட்டுள்ளன. முதலிரண்டு கவிதைகளிலும் கவிஞர் எத்தனையெத்தனை உவமைகளை இத்தனை அழகாகக் கொண்டுவந்து ஒப்புமைப்படுத்தியிருக்கிறார் என்று வியக்காமல் இருக்க முடியவில்லை. தொட்டிலையும் கட்டிலையும் கவி பாடுகையில் “இது ஒருவர் வாழும் ஆலயம்; அது இருவரும் வீழும் போர்க்களம் “ என்று சர்வ சாதாரணமாக யதார்த்தத்தைச் சொல்லி நம்மை வீழ்த்திவிடுகிறார்.

          இருந்தாலும் அடுத்த கவிதையில், “கண்ணீர் பெண்பால். வியர்வை ஆண்பால்” என்று தொடங்கி, “ பல நேரத்தில் இரண்டுமே பலவின்பால்” என்று தொடர்ந்திருப்பினும் மனம் ஏற்றுக்கொள்ள மறுக்கும் வரிகளாகின்றன. இவை. இன்று பெண்கள் கண்ணீர் சிந்துவதைப் புறந்தள்ளி, வியர்வை சிந்தி வாழ்க்கையில் ஆண்களையும் முந்திச் சென்று கொண்டிருக்கின்றோம் என்பது இந்தப் பெருங்கவிக்கு எப்படித் தெரியாமல் போனது? கவியின்பத்திற்காக இயற்றப்பட்ட வரிகளாயிருப்பின் , கவிஞர் வழுமைதி பாட வேண்டும்.

         இவைகள் பேசினால்… என்று கடல் மீன்கள், விண்மீன்கள், கண்ணாடி மீன்கள் ஆகியவை ஐந்தாவது சுற்றில் கவிதைக் கடலில் நீந்தி வருகின்றன. கடல் மீனின் குரலில், “மீனவனாய்ப் பிறப்பது தான் பாவம்” என்று அனுதாபபட்டிருப்பதில் கவிஞரின் சமூக அக்கறையும் மீனவர் வாழ்வின் அவலநிலை குறித்து அவர் வேதனைப் படுவதும் புரிகிறது.

          இளமையில் காதல், என்றென்றும் சுகம். எந்த  மனிதனும் கடந்து வரும் வண்ண மலர்ப்பாதை அது. இதை நினைவு கூறும் வகையில் எண்மருமே மிகுந்த காதல் உணர்வோடு ஆறாம் சுற்றுக்கு ‘உங்கள் காதல் கடிதம்’ என்னும் தலைப்பில் அழகழகான கடிதங்களை எழுதியிருக்கிறார்கள். ரசித்து, லயித்துப் படிக்கலாம் வாசகர்கள்.

          இறுதிச் சுற்றாக,, ‘பூமிப் பந்தைப் புரட்டிப் போடும் ஒரு நெம்புகோல் கவிதை’ என்னும் தலைப்பில் பூமியை அல்ல, உண்மையில் இந்தக் கவிஞர்களும் இவரது கவிதைக் கூட்டாளிகளும் நம்மையே புரட்டிப்                  போட்டிருக்கிறார்கள். அவ்வளவு ஆற்றலும் வலிமையும் வாய்ந்த கவிதைகள்.

குறிப்பாக, “பூமியைப் புரட்டிப் போடும் நெம்புகோல் கவிதைகள் குழந்தைகள் அன்றி வேறென்ன..” என்ற கவிஞரின் ஒற்றை வரியில் குழந்தைகளைப் போற்றினால், அவர்களைக் கொண்டாடினால் பூமி ஏற்றம் பெறும் என்ற மாபெரும் உண்மை நம்மை நெட்டித் தள்ளுகிறதல்லவா?

         ஒரு கவியரங்கத் தலைவராக, மற்ற அனைத்துக் கவிஞர்களையும் அவர்கள் படைப்புகளோடு இணைத்துப் பாராட்டியிருப்பதும், பார்வையாளர்களையும் வாழ்த்தியிருப்பதும் ரசித்து மகிழும் வண்ணம் அமைந்த கவிதைகளாக இருக்கின்றன.  
       
முடிவுரை :
         இத்தகு அறிவாற்றலும் தமிழுணர்வும் சமூக நலனில் அக்கறையும் கொண்ட கவிஞரைத் தென்னாடும், தென்மொழியும், தென்னர் பண்பும் செழித்துலகம் வாழும் வரை வாழி வாழி என்று வாழ்த்தி மகிழ்வோம். குயிலுக்கு இனிமையும், மயிலுக்கு வனப்பும், கதிருக்கு வெம்மையும், புனலுக்குத் தண்மையும் தந்தவர் யார்? இவை யாவும் இயல்பாக, இயற்கையாகப் பிறந்தவை. அதுபோல் கவிஞர் தங்கம் மூர்த்திக் கவிதைகளும் அவர் உள்ளத்தினின்று இயல்பாக அரும்பியவை. தாகூர் கூறியது போல், இந்தக் கவிஞரின் கால்கள் மண்ணில் நடனமாடினாலும், அவர் உள்ளம் வானில் பறந்து கொண்டிருக்கிறது என்பது இவரது கவிதைகள் வழி புலப்படும் பேருண்மை ஆகும். அப்படியே தொடர்ந்து பறந்து இன்னும் பல கவிதைகள் வடிக்கட்டும்: இனிய நூல்கள் பிறக்கட்டும். 
       
         
      மேற்கோள் நூல்கள்
1.    1.  கவிதை பயிற்றும் முறை – டாக்டர் ந. சுப்புரெட்டியார்

2.    2.  கவிதையியல் – க.பூரணச் சந்திரன்

3. 3.  கண்ணதாசன் பாடல்களில் அருமையான சமுதாயச் சிந்தனைகள் – முனைவர். சுப. கதிரேசன்

4.   4. அன்பிலோங்கிய வையம் – தொகுப்பு : ஸ்ரீ ரசா, வர்த்தினி

5.   5.   இனிய நந்தவனம் மாத இதழ், மார்ச் 2017

6.  6.   தேவதைகளால் தேடப்படுபவன் – கவிஞர் தங்கம் மூர்த்தி

7.   7. அந்த வானவில்லுக்கு எட்டு நிறங்கள் – தங்கம் மூர்த்தி.

a

a









No comments:

Post a Comment